றிஸ்வி முப்தி தொடர்பில் ஐயூப் அஸ்மின் வெளியிட்ட கருத்துக்கு யாழ். முஸ்லிம் சமூக ஊடகம் கண்டனம்

றிஸ்வி முப்தி தொடர்பில் ஐயூப் அஸ்மின் வெளியிட்ட கருத்துக்கு யாழ். முஸ்லிம் சமூக ஊடகம் கண்டனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி குறித்து உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு சம்பந்தப்படுத்திய ஐயூப் அஸ்மினின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக யாழ். முஸ்லிம் சமூக ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யாழ். முஸ்லிம் சமூக ஊடகத்தின் தலைவர் பரீட் இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, பத்தாயிரத்துக்கும் அதிகமான உலமாக்களை உறுப்பினர்களாகக் கொண்ட, ஒரு நூற்றாண்டு காலம் கடந்த ஒரு புனித சபையாகும். 

இந்த சபையானது இலங்கை முஸ்லிம் சமூக, சமய விடயங்களுக்கு தலைமை வழங்கும் இஸ்லாமிய இறையியல் என்ற உச்ச மத அமைப்பாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையானது இலங்கையில் வாழும் முஸ்லிம்களுடன் பின்னிப்பிணைந்துள்ள ஒர் அமைப்பாகும். 

எனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வியினை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு சம்பந்தப்படுத்திய  அய்யூப் அஸ்மினின் கருத்தானது இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் இந்த தாக்குதலுடன் கோருத்திருக்கிறார். 

அய்யூப் அஸ்மினின் கருத்தானது மிகவும் பாரதூரமான கீழ்த்தரமான விடயமாகும். அய்யூப் அஸ்மின் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற முறையில் யாழ்ப்பாண முஸ்லிம்களாகிய நாம்,  இவரின் தவறான கருத்தால் வெட்கித் தலைகுனிகிறோம். 

கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ், துருக்கித் தொப்பி அப்துல் காதர் போன்றோர் பிறந்த யாழ். மண்ணில் தான் இவரும் பிறந்துள்ளார். அய்யூப் அஸ்மினின் மூளை ஏன் இப்படி வேலை செய்கிறது என்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் கவலையடைகிறார்கள்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு சம்பந்தப்படுத்திய அய்யூப் அஸ்மினின் கருத்தை யாழ் முஸ்லிம் சமூக ஊடகம் வன்மையாக கண்டிப்பதோடு, அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்" என்றார்.